Saturday, February 27, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - முற்றிலும் யூத்துகளுக்காக

 விண்ணைத்  தாண்டி வருவாயா - இந்த படத்தை பற்றி பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகணும்.அவர்தான் த்ரிஷா - அவர் இந்த படத்தில் அவ்ளோ அழகு.இனிமேல் 'த்ரிஷா இல்லைனா திவ்யா' என்றும் யாரும் சொல்ல மாட்டார்கள்.எனக்கு த்ரிஷாதான் வேணும்ன்னு அடம்பிடிப்பார்கள்.


படம் முழுக்க ஒரு தேவதை போலவே வந்து போகிறார்.தேவதை என்ற சொல்லுக்கு த்ரிஷா என்று இன்றைய இளைஞர்கள் அர்த்தம் சொல்லுவார்கள்.வெகு சீக்கிரமே ஒரு கோவில் கட்டினாலும் அது அசாதாரணம் இல்லை.நான் படம் பார்க்க சென்றதே த்ரிஷாவுக்காகதான். அந்த எதிர்பார்ப்பை நிறையவே பூர்த்தி செய்து விட்டார்கள் இந்த படத்தில்.

அவரின் அந்த கர்லி ஹேரை சொல்லவா இல்லை அந்த மென்மையான பார்வையை சொல்லவா இல்லை கழுத்துக்கு அழகு சேர்க்கும் அந்த டாலரை சொல்லவா இல்லை புடவையை கொஞ்சம் தளர்வாக உடுத்தியிருக்கும் அழகை சொல்லவா இல்லை அந்த ஸ்டைலான நடையை சொல்லவா.எதைச் சொல்லவென்றே தெரியவில்லை.அதிலும் நான் சொல்ல போகும் இந்த காட்சியில் யாராக இருந்தாலும் த்ரிஷாவின் ரசிகராகிவிடும் வாய்ப்பு இருப்பதால் த்ரிஷாவை தொடர்ந்து வெறுத்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த காட்சியில் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.

த்ரிஷாவின் திருமணத்தைப் பார்ப்பதற்காக கேரளா செல்லும் சிம்பு அங்கு இரவில் அவரை தனிமையில் சந்திப்பார்.அப்போது ஒரு வெள்ளை புடவை அணிந்திருக்கும் த்ரிஷா அந்த இரவொளியில் நிலவாய் மின்னுவார்.

                      தொலைதூரத்து வெளிச்ச்சம் நீ !
                      உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே !!

இந்த வரிகளை நிச்சயமாக தாமரை அந்த ஸ்பாட்டில் தான் எழுதியிருக்க வேண்டும்.கச்சிதமாக பொருந்துகிறது த்ரிஷாவிற்கு.படத்தின் இறுதிவரை எல்லாக் காட்சிகளிலும் நேர்த்தியான உடை தேர்வு செய்த உடை வடிவமைப்பாளர் பாராட்டுக்குரியவர்.

அப்புறம் சிம்புவை பற்றி என்ன சொல்ல - மனிதர் பல இடங்களில் வாரணம் ஆயிரம் சூர்யாவை போல் நடிக்க முயன்று தோற்றிருக்கிறார்.சில இடங்களில் ஓவர் ஆக்டிங் எரிச்சலை வரவழைக்கிறது.எனக்கு ஆரம்பத்தில் சிம்புவை இந்த பாத்திரத்தில் பொருத்திப் பார்ப்பது கடினமாக இருந்தது.போக போக சரியாகி விட்டது.இதில் விரலாட்டி பஞ்ச் டயலாக் பேசாமல் நடித்திருப்பது மிக மிக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

படத்தில் சிம்புவின் நண்பராக வருபவர் கொஞ்சம் மெதுவான திரைக்கதைக்கு ஆங்காங்கே கலகலப்பூட்டுகிறார்.அவரின் முகமும் அவரின் குரலும் இவர் இதற்கு முன்னர் ஏதோ ஒரு படத்தில் நடித்தவர் என்று சொல்லுகின்றன.என்ன படம் என நினைவில்லை.

இந்த படத்தில் இன்னொரு நடிகர் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.திரையில் அவரின் முகத்தை தேடாதீர்கள்.உங்களால் கண்டுபிடிக்க முடியாது.அவர்தான் பின்னணி இசை.ரகுமான் அவரின் வாத்தியங்களை வைத்து நம்மை மகுடி கேட்ட பாம்பாய் மயக்குகிறார்.குறிப்பாக சிம்பு முதலில் த்ரிஷாவை பார்க்கும் போது கேட்டில் சாய்வார்.அப்போதும் அப்புறம் சிம்பு குத்துச்சண்டையிடும் போதும் பின்னணி இசை செம!பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி விட்டது.இனி படு ஹிட்டாகி விடும்.

காதலில் வரும் நிஜமான பிரச்சனைகளை யதார்த்தத்தோடு படமாக்கியிருக்கிறார்கள்.நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான காதல் கதைதான். ஆனால் நிறைய காட்சிகள் வாரணம் ஆயிரத்தை நினைவுபடுத்துகின்றன.அந்த ரயில் காட்சி,ஹீரோ காதலியை தேடி செல்லும் காட்சி,பாடல்களில் ஒரு ஐந்தாறு வெளிநாட்டு பிச்சைக்காரகள் ஹீரோவை சுற்றி ஆடும் காட்சி,இப்படி நிறையவே.அப்புறம் ஒரு பெண்ணை பார்த்த நொடியில் காதல் வருவது,பாதி காட்சிகளில் ஆங்கிலத்தில் உரையாடுவது போன்றவை  கவுதம் பாணியாகவே மாறி விட்டது.ஆனாலும் படம் பிடிக்கத்தான் செய்கிறது.

ஒரு காட்சியில் கவுதம் சுய எள்ளல் செய்கிறார்.அதைப் பார்த்த பின்பு  இப்படத்தில் அதை கைவிட்டுவிட்டார் என நினைத்தால் அதைத்தான் இப்படத்திலும் செய்திருக்கிறார்.இந்த படம் ஏ சென்டர் படம் என்றெல்லாம் சொல்லப் போவதில்லை.அப்புறம் சில குசும்பர்கள் 'நானே என்னை ஏ கிளாஸ் என்று சொல்லி நுண்ணரசியல் செய்வதாக' சொல்லும் அபாயம் இருப்பதால் அதை உங்க கருத்துக்கே விட்டுவிடுகிறேன்.

'பச்சக் பச்சக்' என நினைத்த மாத்திரத்தில் சாதாரணமாக படத்தில் கிஸ் அடிப்பதால் 'ஆ ஊ ன்னா கிஸ் அடிச்சுடுறாங்க டா' என்ற கமெண்டை எல்லா தியேட்டர்களிலும் கேட்கலாம்.மொத்தத்தில் படத்தில் பிரித்து சாரி பிரிக்காம மேய்ந்திருக்கிறார் (யார் யாரை என்றெல்லாம் கேட்கக்கூடாது.அதை திரையரங்கில் காண்க!).இப்படம் வயதானவர்களுக்கு பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்..ஆனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.படத்தின்இரண்டாம் பாதி தொய்வாக செல்வதாக சிலர் சொல்கின்றனர்.ஆனால் எனக்கு படத்தில் பிடித்ததே இரண்டாம் பாதி தான்.

இன்னொரு முக்கியமான விஷயம்..'a film by ' என க்ளைமாக்சுக்கு கொஞ்சம் முன்னாடி என்டு கார்ட் போடுவார்கள்.அதை நம்பி வெளியே வந்து விடாதீர்கள்.ஆபரேட்டரிடம் படம் முடிந்து விட்டதா என கன்பார்ம் செய்து விட்டு வெளியேறவும்.

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Saturday, February 13, 2010

காதல் - காதல் - காதல்

மு.கு: இது காதலர் தின சிறப்பு பதிவல்ல..காதலர் தினம் என்பது காதலி கிடைக்காதவர்களுக்கும்,கிடைத்த காதலியை மிஸ் செய்தவர்களுக்கு மட்டுமே..வாழ்நாள் முழுவதும் காதலித்து கொண்டிருப்பவர்களுக்கு தினம் தினம் காதலர் தினமே!!

உலகெங்கும் காதலர் தின கொண்டாட்டத்தில் ஒவ்வொரு காதலரும் குதூகலித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் காதலிப்போருக்கும், காதலைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும்,காதலின் சம்மதத்துக்கு காத்திருப்போருக்கும்,காதலித்து கரை ஒதுங்கியவர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் !!

காதல் - இன்றைய மட்டுமல்ல என்றைய இளைஞர்களுக்கும் அது ஒரு கனவு..என் பள்ளி நாட்களில் சில நண்பர்களின் காதலைக் கண்டு நம்மை இப்படி காதல் செய்ய யாரும் வர மாட்டார்களா என ஏங்கியதுண்டு..இன்று அந்த ஏக்கத்தை என் நண்பர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்..ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இருந்தேன்..காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சியால் வந்து விடக்கூடாது என்று..ஒரு பெண்ணிடம் ஏற்படும் உடல் ரீதியான ஈர்ப்பு எனக்கு வெகு நாட்கள் நீடித்ததில்லை..அதனால் வாழ்க்கை முழுதும் நம்முடன் வரப்போகும் பெண் மாறாத அன்பையும் உண்மையான அக்கறையும் ஏன் மீது கொண்டவளாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன்..

என்ன செய்வது? இது போல புரட்சிகரமாக சிந்தித்து விட்டாலும் கூட சில பெண்களை காணும் போதெல்லாம் மனம் தடுமாறவே செய்தது..என் மனதை அலைபாய விடாமல் பெவிக்விக் போட்டு ஒட்டுவது பெரிய வேலையாக இருந்தது..என்னதான் ஒட்டினாலும் கண்ணை மட்டும் 'கண்'ட்ரோல் செய்ய முடியவில்லை..சுடிதார் இருக்கும் திசையெல்லாம் கண்கள் மேய்ந்து கொண்டுதானிருந்தது..

மேலே இருக்கும் பத்தியில் கடைசியாக 'காதலிக்கும் வரை' என்று போட்டு கொள்ளுங்கள்..காதல் வந்து விட்ட பிறகு பிற பெண்களை சைட் அடிப்பது குறைந்து விட்டது...அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க..சரி நாம வேற விசயத்த பத்தி பேசுவோம்..இந்த டாபிக்கில் இனியும் பேசுவது எனக்கு நல்லதல்ல..

நீங்க ஒன்ஸ் காதலிக்க ஆரம்பிச்சீங்கன்னா கவிதை அப்படியே சும்மா சிரேயாவை பார்த்த தலைவர் மாதிரி வாட்டர்பால்ஸா கொட்டணும்..ஆனால்  சில பேரு காதலிக்காமலே நல்லா கவிதை எழுதுறாங்க..காதலிக்கிற மாதிரியே அந்த உணர்வுகளோடு எழுதுவது எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது..

                                        காதலியில்லாத சிலரின்
                                        கவிதைகள் - அவர்கள் எப்போதிருந்து
                                         உன்னைக் காதலிக்க ஆரம்பித்தார்கள் !

மேலே இருப்பதை நீங்கள்  கவிதையாக எடுத்துக் கொண்டாலும் சரி..வாக்கியமாக எடுத்துக் கொண்டாலும் சரி..எனக்கு கவலை இல்லை..ஆனால் சில பேரு நமக்கு கவிதை எழுத வரலேன்னு கவலைப்படுவாங்க..அவங்களுக்காக - இதுக்கு எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு..இருக்கவே இருக்கு சினிமா பாடல்கள்..பாடல்களின் நடுநடுவே வரும் வரிகளை கவ்விக்கிட்டு அதை உங்கள் மனம் கவர்ந்தவரிடம் அப்பப்ப சொன்னா போதும்..இதோ இது மாதிரி..

//மகிழ்ச்சியில் என்னை  ஆழ்த்த  பரிசுகள்  தேடி  பிடிப்பாய்
கசந்திடும்  செய்தி  வந்தால், பகிர்ந்திட  பக்கம் இருப்பாய்
 
நோய்  என  கொஞ்சம்  படுத்தால் , தாய்  என  மாறி  அணைப்பாய்! //

//உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூப்பூக்கும் 
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும் 
உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலைமோதும் 
உன் வாசல் தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்!! //

// விண்சொர்க்கமே பொய் பொய் !

 என் சொர்க்கம் நீ பெண்ணே!! //

இதையெல்லாம் அதே ராகத்துல பாடாம கவிதை மாதிரி சொல்லி அவங்கள இந்த வரிகள் எந்த பாடல்ன்னு கண்டுபிடி பார்க்கலாம்ன்னு விளையாடலாம்..(இதெல்லாம் எந்த பாடலின் வரிகள் என்று நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம் உங்கள் ஜெனரல் நாலெட்ஜ் எவ்வளவு என்று)அப்புறம் முக்கியமான ஒன்று : இந்த வரிகள்  'என் சொந்த படைப்பு' என்று புருடா விட்டு பின்னால் மாட்டி கொண்டால் அவ்வளவுதான்..நீங்கள் சொந்த கவிதை எழுதினால் கூட நம்ப மாட்டார்கள்..

கவிதைதான் வேணும்ன்னு அடம்பிடிச்சா இந்த மாதிரி அவுத்து விடுங்க.. அடங்கிடுவாங்க..

                                                          பருக்கள் கூட அழகுதான்
                                                          அவை உன் கன்னத்தில்
                                                           குடியிருக்கும் போது !
                                                           என்னை விட அதிக நேரம்
                                                           முத்தமிடுவதால்
                                                           அவற்றின் மீது பொறாமையும் கூட!


இதெல்லாம் ஓகே..முதலில் பிள்ளை வேணுமே பேரு வைக்க..அப்படிங்கிறீங்களா..(என்னது முதலிலேயே பிள்ளையான்னு கேட்காதீங்க..அது உவமை) காதலி கிடைத்தால் தானே கவிதை சொல்ல முடியும்..பொறுமை..சீக்கிரமா அமையும்..நட்பை காதலாக மாற்ற துடிப்பவர்கள் கூட மேலே இருப்பது போன்ற  பாடல் வரிகளை அனுப்பலாம்..ஒரு கண்டிஷன்: அதுல 'காதல்' அப்படிங்கிற வார்த்தை வரக்கூடாது..வந்தா முதலிலேயே உஷார் ஆகிடுவாங்க..உடனே தன் தோழியிடம் இது குறித்து டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்..காதலையும் தோழியையும் அருகில் வைத்தால் காதலி கோபித்து கொள்வாள் என்பதால் தோழி அடுத்த பாராவுக்கு தாவுகிறார்..

இந்த தோழிகள் விசயத்தில்  கொஞ்சம் முன் எச்சரிக்கை தேவை..நீங்க ப்ரபோஸ் செய்ய செல்பவரின் தோழி யாரையாவது காதலித்து கொண்டிருந்தால் நோ ப்ராப்ளம்..சப்போஸ் அவங்க காதல் தோற்று போயிருந்தாலோ அல்லது காதலன் கிடைக்காமல் பொருமிக் கொண்டிருந்தாலோ உங்கள் காதலை எலுமிச்சம்பழமாகவும் காதலியின்  தோழியை லாரியாகவும் உருவகம் செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை..

திடீர் என்று உங்கள் தோழி(காதலியாக மாற போகிறவர்) உங்களிடம் 'ஆர் யு லவ்விங் மீ? ' அப்படின்னு கேட்டா உடனே தலையாட்டிடாதீங்க..உங்களை காதலிக்கும் பெண் துணிந்து இவ்வாறு கேட்க மாட்டாள்..அவளின் அப்ரோச் வேறு மாதிரி இருக்கும்..''உன்னை போல ஒரு சிறந்த நண்பனை பார்த்ததில்லை.உன்னை மாதிரி யாரும் என்னை கேரா பாத்துகிட்டதில்ல'' - இந்த மாதிரி இருக்கும்..உடனே ''ஐ லவ் யூ'' ன்னு சொல்லி காஞ்ச மாடு வயலை பார்த்த மாதிரி பாஞ்சுரகூடாது..பொறுமையா கவுதம் படத்துல வர்ற மாதிரி
''இத்தனை காலங்கள் நீ இல்லாமல் வாழ்ந்து விட்டேன்..இனி வரும் காலங்களில் என் ஒவ்வொரு நாளும் உன்னை சுற்றியே, உனது அன்பின் கதகதப்பில் வாழ ஆசை..சம்மதிப்பாயா ? "

இந்த மாதிரி கேட்கணும்..அவங்க சம்மதம் சொன்னதுக்கு அப்புறம் 'ஐ லவ் யூ' சொல்லணும்..ஏன்னா 'ஐ லவ் யூ' என்ற வார்த்தைகள் அதன் புனிதத்தை இப்போது இழந்து விட்டன..சினிமாவும் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்..

பி.கு: 'எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு?' 'நாட்டுக்கு இப்போ இது ரொம்ப முக்கியம்' போன்ற பின்னூட்டங்கள் கடுமையான ஆட்சேபத்துக்கு உள்ளாகும்..

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Thursday, February 4, 2010

பதிவுலகத்துக்கு குட்பை !

அவ்வளவுதாங்க! எல்லாம் முடிஞ்சு போச்சு..இனிமேல் பதிவுலகத்த விட்டு போயிடலாம்ன்னு இருக்கேன்..ரொம்ப மனசு வெறுத்து போயிட்டேன்..ஒரு சின்ன பையன் எவ்வளவு தான் தாங்குவேன்..எனக்கும் சில உணர்வுகள் இருக்கிறது..ஆள விடுங்கப்பா சாமின்னு நான் புலம்பும் அளவுக்கு என்னை வருத்தத்துக்கு உள்ளாக்கிய சில விஷயங்கள் :

==> நான் எங்க போயி பின்னூட்டம் போட்டாலும் என்னை சுத்தி அடிக்கிறதுக்குன்னே சில பேரு இருக்காங்க ..ஸ்மைலி போடுறத கூட சீரியஸா எடுத்துக்குறாங்க..

==> நான் பதிவு போட்ட முதல் ஒரு மணி நேரத்தில் நூறு  ஹிட்ஸ்க்கு மேல வருது..ஆனா அதுல விழுற வோட்டு மூன்று அல்லது நான்கை தாண்ட மாட்டேங்குது..நான் என்ன அவ்ளோ கேவலமாவா எழுதுறேன் ?

==> இந்த கேபிள்,கார்க்கி,பரிசல் போன்றவர்கள் எல்லாம் பின்னூட்டம் போடுவதோட சரி..பாலோ பண்ணுவதோ வோட்டு போடுவதோ கிடையாது..'Follow' பட்டனை அமுக்கி ஒரு ரெண்டு மூணு கிளிக் பண்ணா என்ன குறைஞ்சா போயிடுவாங்க ? என்னை போன்ற சின்ன பதிவர்கள் அவர்களை பின்வாங்க ஆரம்பித்தால் அவர்களுக்கு நூறு பாலோயர் கூட தேறாது..

==> இந்த ராஜுங்றவரு கேபிள் கவிதைக்கு மட்டும் தான் எதிர் கவிதை எழுதுறாரு..நான் எழுதுற கவிதை எல்லாம் அவர் கண்ணுக்கு தெரியாதா? நான் கவிதை எழுதாம என்ன கழுதையவா எழுதுறேன்?

==>நான் காதல் (அ) காதலியை பற்றி பதிவு போடுவதால் எல்லாரும் பின்னூட்டத்துல எப்போ கல்யாணம் எப்போ கல்யானம்ன்னு கேக்குறாங்க..ஒரு 21 வயதே நிரம்பியஇளைஞனை இப்படியே கேட்டு உசுப்பேத்துதல் முறைதானா ?

==>சில சமயம் காதலைப் பற்றி பதிவு போட்டு விட்டு அதற்கு வோட்டு கேட்பது எனக்கு என் காதலை விற்பது போல் இருக்கிறது...




மேலே சொன்னதெல்லாம் டூப்பு மச்சி டூப்பு..கீழே சொல்ல போவது தான் டாப்பு...

ஒண்ணுமில்ல..இரண்டு மாத விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பித்து விட்டதால் இனி தொடர்ந்து பதிவு எழுத முடியாது..இனி ஒழுங்காக படித்து ஒரு வேலையில் அமர்ந்தால்தான் எனக்கென்று இருக்கும் ஒரு மிகப்பெரிய  பொறுப்பை 'கை-பற்ற' முடியும்..பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் பதிவு போட முடியும்..நண்பர்களுக்கு பின்னூட்டமோ வோட்டோ போட முடியாது..ரீடரில் தான் பதிவுகளை படிக்கிறேன்..அதுவும் கல்லூரியில் :) என்னை பின்னூட்டமிட தூண்டும்படி(வம்புக்கு இழுக்கும்படி)  ஏதும் பதிவுகள் இருந்தால் அங்கே பின்னூட்டலாம்..மற்ற நண்பர்கள் கோபித்து கொள்ள வேண்டாம்..அப்புறம் முக்கியமான ஒன்று..பாலோயர்ஸ் யாரும் விலகி போயிடதீங்கப்பா..அப்பப்போ பதிவுகள் போடுவேன் :))


ஆணி குறைவாக இருக்கும் மாலை நேரங்களில் டுவிட்டர் பக்கம் நான் தலைகாட்டலாம் சாரி வாலாட்டலாம்..

------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ஹைக்கூ:

ஏய் ஓடாதீங்க..நில்லுங்க..ஹைக்கூவை நிதானமாக வாசிக்க வேண்டும்..முதல் இரண்டு வரிகளை மெதுவாக படித்து விட்டு கண்ணை மூடி கவிஞன்(ஹி ஹி! நான்தான்) என்ன சொல்ல வருகிறான் என்று யோசித்து விட்டு பின்பு மூன்றாவது வரியை வாசித்தால் ஒரு உணர்வு கிடைக்கும் பாருங்க..அப்போ நீங்க சொல்லுவீங்க ஹைக்கூகூகூ!!!!!!!

நாத்திகனின்
நெற்றியில் திருநீறு !



வென்றது காதல் !!

-----------------------------------------------------------------------------------------------------------------

அப்புறம் ஒரு ஜோக் போடனும்ன்னு நெனச்சேன்..அதுக்குள்ள கார்க்கி அந்த வடையை லபக்கிட்டார்..இருந்தால் என்ன..என் வேலையை சுலபமாக்கியதற்கு நன்றி !

டீச்சர் : நம் நாட்டு தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது
டீச்சர்:  தேசிய பூ?
மாணவன்: ஒரு சின்னத் தாமரை
டீச்சர் : சோழ மன்னன் ஒருவரின் பெயராவது சொல்லுடா
மாணவன்: கரிகாலன் காலைப் போல
டீச்சர் : (அடிக்கிறார்)
மாணவன்:  நான் அடிச்சா தாங்கமாட்ட
டீச்சர் : குட்டுக்கிறார்
மாணவன் : என் உச்சி மண்டைல சுர்ருங்குது
டீச்சர் : உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும்
மாணவன் :??????????????????????????????
 ------------------------------------------------------------------------------------------------------------------------------
பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..

Monday, February 1, 2010

மதுரை கருத்தரங்கம் - ஒரு அரைகுறை பார்வை

எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை..அவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறேன்..அரைகுறை பார்வைன்னு ஏன் தலைப்பு வச்சிருக்கேன்னு கேட்கிறீங்களா..என்னாது கேட்கலையா..நீங்க கேக்காட்டியும் நாங்க சொல்லுவோம்..6 மணிக்கு முடிய போகும் நிகழ்ச்சிக்கு 5 மணிக்கெல்லாம் சென்று விட்டேன்..கருத்தரங்கு என்றால் ஏதாவது மொக்கை போடுவார்கள்..நாம் பதிவர்களைமட்டும் சந்தித்து விட்டு வரலாம் என்ற எண்ணமே காரணம்..பாதி நிகழ்ச்சிக்கு மட்டுமே சென்றதால் இது ஒரு அரைகுறை பார்வை ; வேணாம் அரை நிறை பார்வை !

நான் சென்ற போது டாக்டர் ஷாலினி கேள்வி-பதில் செஷன் நடத்திக் கொண்டிருந்தார்..என்னனமோ சொல்றாரு..ராமாயணம் பேசுறாங்க..மகாபாரதம் பேசுறாங்க..இதெல்லாம் தெரிந்து கொள்ள எங்கிருந்துதான் நேரம் கிடைக்கிறது என்றே தெரியவில்லை..அது மட்டுமல்ல மிகவும் சுவாரசியமாகவே பேசுகிறார்..அப்போதான் பீலிங்கா இருந்துச்சு..ச்சே..முதலிலேயே வந்திருக்கலாம் என்று..

நிகழ்ச்சி முடிந்ததும் வால்பையன்,தேவன் மாயம் போன்ற பதிவர்கள் குழுவாக பேசிக்கொண்டிருந்தார்கள்..நான் ஒரு ஓரமாக நின்று அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்..அப்போதான் கா.பா (சாரி! பெயர் பெரிதாக இருப்பதால் சுருக்கிக் கொண்டேன்) வந்து என்னை யாரென்று கேட்டு மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார்..எல்லாரும் கை குலுக்கினார்கள்..செல் நம்பர் வாங்கினார்கள்..மிக்க மகிழ்ச்சியாக இருந்தது..

நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள்..கா.பா, ஸ்ரீதர்,ஜெர்ரி,தருமி,சீனா,காவேரி கணேஷ்  (ஆணி அதிகமிருப்பதால் அண்ணா,அய்யா போன்றவற்றை நிரப்பி கொள்ளுங்கள் ப்ளீஸ்!) .

வால்பையன் எழுதுவது மட்டுமல்ல பேசுவதும் சூப்பராக பேசுகிறார்..சிலர் நன்றாக எழுதுவார்கள் ஆனால் பேச வராது..எ.கா.க்கு என்னை கூட காட்டலாம் :)..அட! கல்லை கீழே போடுங்கப்பா..சிரிப்பான் போட்டா காமெடியா எடுத்துக்கணும்..வால் சீனா அய்யா குறித்து சொன்ன சின்ன கார் நக்கலை நினைத்து இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன்..

கா.பா., ஸ்ரீதர்  குறித்து சொல்லியே ஆக வேண்டும்..தயக்கத்தோடு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தவனை அனைவரிடமும் அறிமுகப்படுத்தி என்னையும் இறுதி வரை கவனித்து கொண்டார்கள்..ஜெர்ரி விடைபெறும் போது என்னிடம் சொல்லி விட்டு கிளம்பினார்..அப்புறம் தருமி அய்யா,சீனா அய்யா ஆகியோர் என்னை போன்ற இளைங்கர்களுடன் பேசும் போது அவர்களும் இளைஞர்கள் ஆகி விடுகிறார்கள்..
முதலில் இவர்களுடன் பேச நான் அஞ்சிக் கொண்டிருந்தேன்..பெரிய மனிதர்கள் நம்மை கண்டு கொள்வார்களா என்று...அவர்களின் பழகும் விதத்துக்கு ஒரு சான்று : நான் கிட்டத்தட்ட மூன்று,நான்கு முறை போய் வருகிறேன் என்று கைகுலுக்கியும் கூட என்னால் போக முடியவில்லை..இறுதி வரை இருந்து விட்டுதான் வந்தேன்..நான் எந்த நிகழ்ச்சிக்கும் இறுதி வரையெல்லாம் இருப்பதில்லை..பாதியிலேயே எஸ்ஸாகி விடுவேன் என்பது கொசுறு தகவல்!

நான் கவனித்த ப்ளஸ் பாயிண்டுகள் :

-.->இவர்கள் யாரிடமும் எந்த ஈகோவும் இருப்பதில்லை..புதிதாக வருபவனிடம் கூட இவ்வளவு தோழமையுடன் பேச முடியுமா என்று வியந்து கொண்டிருக்கிறேன்..

-->அனைவரும் மிகவும் துடிப்புடன் செயல்படுகிறார்கள்..இவர்களை பார்த்து சோம்பேறியான எனக்கே 'ஏதாவது உதவி தேவையா' என்று கேட்க  தோன்றியது..

ஒரு மாவட்ட பதிவர்கள் கூடும் போதே இவ்வளவு நெகிழ்ச்சிகள் என்றால் மொத்த தமிழ்நாட்டின் பதிவர்கள் சந்தித்தால்...நினைத்தாலே புல்லரிக்கிறது..

                                 இது போல சொந்தம் தந்ததால் 
                                 கூகிளே வா நன்றி சொல்கிறோம் !!

என்ன ஒரு குறை..எப்போதும் ஒரு முக்கியமானவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருப்பேன்..அவருடன் பேச முடியாததால் கோபித்து கொண்டார்..ஏன்யா சொந்த பந்தங்களை மறக்கும் அளவுக்கா அன்பு காட்டுவீர்கள்..கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் :)

அப்புறம் அவரை சமாதானப்படுத்தி பதிவர் சந்திப்பு குறித்தும் அவர்களின் தோழமையையும் சொன்னேன்..அப்போது அவர் சொன்னது..

'அவங்க எல்லாரையும் நம்ம கல்யாணத்துக்கு கூப்பிடனும்ங்க..'

'கண்டிப்பா செல்லம்..அவங்க எல்லாரும்தான் நம் கல்யாணத்தில் சீப் கெஸ்ட் '

பதிவு  பிடிச்சிருந்தா  மறக்காம வோட்ட போட்டு போய்டுங்க..